Skip to content

திருக்குறளின் முதல் பதிப்பு

Category:

திருக்குறள் 1812 இல் முதல் முறையாக அச்சில் ஏறிய மதம் சாராத நூல்.. அதன் பதிப்பு வரலாறு

திருக்குறள் முதன்முதலில் அச்சு வடிவம் பெறும்போது அதில் பிழைகள் இருக்கக்கூடாது என்பதற்காக சைவத்திருமடங்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர்

திருக்குறள் முதல் பதிப்பு

திருக்குறளின் மூலப் பதிப்புகளுள் தமிழில் மிகத் தொன்மையான பதிப்பாக இன்று நமக்குக் கிடைப்பது கி.பி. 1812-இல் வெளியான

“திருக்குறள் மூலபாடம் தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனார் அருளிச் செய்தது ”

என்னும் தலைப்பில் அமைந்த நூலாகும்.

’இலக்கணவிலக்கிய வாராய்ச்சியுடையவர்கலிகிதப் பிழையற வாராய்ந்து சுத்த பாடமாக்கப்பட்டது’

என்னும் குறிப்புடனும்

‘கலியுகாப்தம் ௪த௯௬ சி. ககு ஆங்கீர ௵ தொண்ட மண்டலம் சென்னைப் பட்டினத்தில் தஞ்சை நகரம்-மலையப்ப பிள்ளை குமாரன் ஞானப்பிறகாசனால் அச்சிற் பதிக்கப்பட்டது

மாசத் தினச்சரிதையின் அச்சுக்கூடம்.
இ.ஆண்டு ௬௮ளய௨

( 1812 எனத் தமிழ் எண்ணில் தரப்பட்டுள்ளது )

என்னும் குறிப்புடனும்

தலைப்புப்பக்கம் திகழ்கின்றது. இந்நூலுடன் நாலடியார் மூலபாடமும், திருவள்ளுவமாலை மூலபாடமும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளன.

மரவெழுத்தால் அச்சடிக்கப்பட்டுள்ள இப்பதிப்பே திருக்குறள் பதிப்பு வரலாற்றில் முதல் நூலாகத் திகழ்கின்றது. தமிழகத்தில் முதன் முதலாக கி.பி. 1712-இல் தரங்கம்பாடியில் முதல் அச்சுக்கூடம் ஏற்பட்டது. எனவே, அச்சுக்கூடம் ஏற்பட்டுச் சரியாக ஒரு நூற்றாண்டிற்குப் பின்னர் இப்பதிப்பு நமக்குக் கிடைத்துள்ளது.

‘வரலாறு’ என்னும் தலைப்பில் அந்நூல் தரும் செய்தி வருமாறு.

‘கற்றுணர்ந்த தமிழாசிரியர்களருமையினியற்றிய – இலக்கண விலக்கியங்களாகிய- அரிய நூல்களெல்லாம் – இந்நாட்டில் – அச்சிற் பதிக்கும் பயிற்சியின்றிக் கையினாலெழுதிக் கொண்டு வருவதில் – எழுத்துக்கள் குறைந்தும் மிகுந்தும் – மாறியுஞ் சொற்கடிரிந்தும் – பொருள் வேறுபட்டும் பாடத்துக்குப் பாடம்- ஒவ்வாது பிழைகள் மிகுதியுமுண்டாகின்றவால் – அவ்வாறு பிழைகளின்றிச் சுத்த பாடமாக நிலைக்கும்படி – அச்சிற் பதித்தலை வழங்குவிப்பதற்கு உத்தேசித்து – நூலாசிரியர்களுள் தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனார ருளிச் செய்த – அறம் பொரு ளின்ப மென்னும் முப்பாலையும் நுட்பமாக விளங்கவுணர்த்துந் திருக்குறள் மூலபாடமும் – முனிவர்க ளருளிச் செய்த நீதி நூலாகிய நாலடி மூலபாடமும்- இப்போதச்சிற் பதிக்கப்பட்டன’

பதிப்பு நெறிகள்

இந்நூலின் அச்சிற்பதிப்பதற்கு முன் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை அடுத்தப் பகுதி எடுத்துரைக்கும்

“ இவை அச்சிற்பதிக்குமுன் தென்னாட்டில் பரம்பரை – ஆதீனங்களிலும் வித்வ செனங்களிடத்திலுமுள்ள சுத்த பாடங்கள் பலவற்றிற்குமி ணங்கப் பிழையற- இலக்கண விலக்கிய வாராய்ச்சியுடையவர்களாலா ராய்ந்து சுத்த பாடமாக்கப்பட்டன.

இந்தக் குறிப்பு திருக்குறளின் அனைத்துச் சுவடிகளையும் தொகுத்துப் பார்த்த செய்தியை அறிவிக்கும்

சுத்த பாடங்களைத் தீர்மானிப்பதற்குத் தனி ஒருவரின் முயற்சி பெரிதும் பயன் தராது; எனவே அறிஞர் குழு கூடி முடிவெடுத்தமையும், அவ்வாறு எடுத்த முடிவையும் பல்வேறு அறிஞர்களுக்கு அன்னுப்பி கருத்துரை பெற்றதையும் முதல் பதிப்பின் வரலாறு நமக்குக் காட்டுகின்றது.

“இஃதுண்மை பெற – திருப்பாசூர் முத்துசாமிப் பிள்ளை, திருநெல்வேலிச் சீமை – அதிகாரி – ம. ராமசாமி நாயக்கர் முன்னிலையி லன்னாட்டிலிருந் தழைப்பித்த சுத்த பாடங்களுட னெழுதி வந்த வரலாறு. ”

” இந்தப் பொத்தகத்திலெழுதிய தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயனார ருளிச் செய்த திருக்குறள் மூலபாடமும் – நாலடியார் மூலபாடமும் திருவள்ளூவ மாலையும் – ஆக – மூன்று சுவடியும் வெகு மூல பாடங்கள்- உரை பாடங்களாதற்குக் கருவியாக வேண்டும் – இலக்கண விலக்கியங்களெல்லாம் வைத்துப் பரிசோதித்துப் பாடந்தீர்மானஞ் செய்து – ஓரெழுத்து ஓர்சொல் நூதனமாகக் கூட்டாமற் குறையாமல னெக மூல பாடங்களுரைப் பாடங்களுங் கிணங்கனதாகத் தீர்மானம் பண்ணிய ந்தப்பாடம் பார்த்தெழுதிச் சரவை ( பிழை )பார்த்த பாடமாகையாலும் – அந்தப்படி தீர்மானம் பண்ணி யெழுதின பாடமென்பதும் – இவடங்களலிருக்குந் தமிழாராய்ச்சியுடைய மகாவித்துவ செனங்களாற் பார்க்கும்போது மவர்கள் கருத்திற்றோன்றப்படும் ஆகையாலும் பாடங்களி லெவ்வளவேனுஞ் சந்தேகப்பட வேண்டுவதினன்று –

இப்படிக்கு
திருநெல்வேலி
அம்பலவாணக் கவிராயர்.”

இந்தப் பாடங்களை இவடம் வந்திருந்த திருவாவடுதுறை – ஆதீன வித்துவான்- அம்பலவாணத் தம்பிரான் சீர்காழி வடுகநாத பண்டாரம் இவர்களாலு மறுபடி கண்ணோட்டத்துடனா ராயப்பட்டன”.
எனவே பல்வேறு அறிஞர் குழாம் கூடி மூலபாடம் தெளிந்த முயற்சி இவற்றால் புலனாகும்.

—————————————————————————————————————————————————————————————

”இது பொத்தகம் கலியுகாப்தம் 4900-க்கு ஆங்கிரச தொண்டை மண்டலம் சென்னைப் பட்டணத்தில் தஞ்சை நகரம் மலையப்ப பிள்ளை குமாரன் ஞானப்பிறகாசனால் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது. மாசத் தினச் சரிதையின் அச்சுக்கூடம், ஆண்டு 1812. திருநெல்வேலி அம்பலவாணக் கவிராயர் பிழைதீர்த்துச் சென்னைப் பட்டினத்துக்கு அனுப்புவிச்சு, அவ்விடத்திலிருந்து திருவாவடுதுறை ஆதீன வித்துவான் அம்பலவாணத் தம்பிரான், சீர்காழி வடுகநாத பண்டாரம் அவர்கள் மறுபடிக் கண்ணோட்டத்துடன் ஆராயப்பட்டு அச்சிற்பதித்த காகிதப் பொத்தகத்தை ஆழ்வார் திருநகரியில், தேவர்பிரான் கவிராயர், ஆதிநாத பிள்ளை தலத்தேடுகள் வைத்துச் சோதித்து வேடு எழுதியிருப்பது மறுபடி திருநெல்வேலியில் அம்பலவாணக் கவிராயரிடத்தில் தீர்மானமானது. ஆழ்வார் திருநகரியில் சோதித்தது 999 தை மீ……. நம்முடைய ஏடு சுத்தமாய்த் திருத்தியிருக்கிறது

என்னும் குறிப்பினால் அச்சேறிய திருக்குறளின் முதல் பதிப்பிலும் மூலபாடங்களைத் திருத்தி மீண்டும் பதிப்பாசிரியருக்கே அனுப்பித் தீர்மானம் செய்த பதிப்பு வரலாறு தெரிய வருகின்றது. பிழையான பாடங்கள் நூலில் புகுந்து விடக்கூடாது என்னும் உயரிய நோக்கம் இதனால் தெளிவாகும். இவ்வோலைச் சுவடியில் பிழை திருத்தங்கள் பற்றி விரிவான குறிப்புகள் இருப்பதுமல்லாமல் அட்டவணைப்படுத்தியும் எழுதியுள்ளனர்.

அதிகாரம், குறள், ஆழ்வார்திருநகரி ஏடு, அச்சடி-பிழை -என்னும் நான்கு தலைப்புகளின் கீழ் அமைக்கப்ப்பட்டுள்ளது. எனவே, இச்சுவடி “திருக்குறள் பாட பேத ஆராய்ச்சி ஏடு” எனலாம்.

திருக்குறளுக்குக் கிடைத்த முதல் அச்சுப்பதிப்பு நூலிலேயே, பதிப்பு நெறிகள், குறித்த பல அரிய விவரங்கள் நமக்குக் கிடைக்கின்றன. முன்னையோர் ஒரு நூலினைப் பதிப்பிக்குமுன் மேற்கொண்ட குழு முயற்சிகள் புலனாகின்றன. அச்சு நூலினும் வரும் பிழைகளைக் களைகின்ற ஆய்வு நெறி “பாட பேத ஆராய்ச்சி ஏடு” ஒன்றினாலும் நமக்குத் தெளிவாகும்.
—————————————————————————————————————————————————————————————
1.ஆ.விநாயகமூர்த்தி, மூலபாட ஆய்வியல்.
2. திருக்குறள் மூலபாடம் ( 1812 ) பக்கம் 2
3. சரவை – எழுத்துப்பிழை ( தமிழ்ப் பேரகராதி தொகுதி 3. பக்கம் 1315 )
4. கல்கத்தா தேசிய நூலகத் தமிழ்ச் சுவடிகள் ( மு. சண்முகம் பிள்ளை & இ.சுந்தரமூர்த்தி ) பக்கம் 30
———————————————————————————————————————————————

வெள்ளி விழா மலர் , 1970-1975 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
கட்டுரை எண் 31. திருக்குறள் முதல் பதிப்பு
பேராசிரியர் டாக்டர் இ.சுந்தரமூர்த்தி
தமிழ் மொழித்துறை, சென்னைப் பல்கலைக் கழகம் ( 1995 )